Archives: டிசம்பர் 2021

கிறிஸ்மஸ்க்கு ஒருநாள் நெருக்கத்தில்

“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள். 

அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன். 

காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).

பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது. 

பொன்னிலும் சிறந்தது

அமெரிக்காவின் பெரிய தங்கவேட்டை நடந்த நாட்களில், கலிபோர்னியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட எட்வர்ட் ஜாக்சன், மே 20ம் தேதி 1849இல் தன்னுடைய டைரி குறிப்பில், வியாதினாலும் மரணத்தினாலும் குறிக்கப்பட்ட அந்த கொடுமையான வேகன் பயணத்தைக் குறித்து புலம்பியிருக்கிறார். “என்னுடைய எலும்புகளை இங்கு விட்டுச்செல்லாதீர்கள்; முடிந்தால் அவற்றை வீட்டிற்கு கொண்டுசெல்லுங்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார். தங்கவேட்டையில் ஈடுபட்ட ஜாண் வாக்கர் என்னும் வேறொரு நபர், “நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு இங்கு பொக்கி~ங்கள் இருக்கிறது... ஆனால் யாரும் இங்கே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

வாக்கர் பின்நாட்களில் வீடு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட்டு, கடைசியில் மாநில தேர்தலில் வெற்றிபெற்றார். வாக்கரின் பழைய கடிதங்களை அவருடைய வீட்டார், “ஆன்டிக்ஸ் ரோட்ஷோ” என்னும் அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு கொண்டுபோனபோது, அவைகள் அங்கு பல மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “அவர் தங்க வேட்டையைக் காட்டிலும் விலைமதிக்கமுடியாத கடிதங்களை அங்கிருந்து எடுத்துள்ளார்” என்று கூறினாராம். 

வாக்கரும் ஜாக்சனும் அந்த தங்க வேட்டையிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொண்டு வீடு திரும்பி, நடைமுறை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டனர். “ஞானத்தைக் கண்டடைகிற மனு~ன்... பாக்கியவான்... அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம்” (நீதிமொழிகள் 3:13,18) என்று ஞானத்தைக் குறித்த சாலமோனின் வார்த்தைகளை பார்க்கிறோம். “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (வச. 14) என்று பூமியின் அனைத்து காரியங்களைக் காட்டிலும் ஞானம் விலையேறப்பெற்றதாய் முன்வைக்கப்படுகிறது (வச. 15).

“அதின் வலதுகையில் தீர்க்காயுசும், ... அதின் பாதைகளெல்லாம் சமாதானம்” (வச. 16-17). கண்ணைப் பறிக்கும் காரியங்களை விட்டுவிட்டு ஞானத்தை தெரிந்துகொள்வதே நம்முடைய சவால். இதுவே தேவனுடைய ஆசீர்வாதமான பாதை. 

சிங்கம், ஆடு, இரட்சகர்!

நியூயார்க் பொது நூலகத்தின் வாயிலை கவனிப்பதுபோன்று இரண்டு கல்லால் ஆன சிங்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மார்பிள் கற்களால் செதுக்கப்பட்ட அந்த சிங்கங்கள், 1911ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கிருக்கிறது. அந்த நூலகத்தின் ஸ்தாபகர்களை கனப்படுத்தும் விதத்தில், துவக்கத்தில் அந்த சிங்கங்களுக்கு லியோ லெனாக்ஸ் என்றும் லியோ அஸ்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் நியூயார்க்கின் கடினமான ஒரு காலகட்டத்தில், அதின் மேயர் ப்யோரெல்லா லகார்டியா, அந்த சிங்கங்களுக்கு வலிமை மற்றும் பொறுமை என்று பெயர் மாற்றினார். நியூயார்க் மக்களுக்கு அவை இரண்டு அந்த சவாலான தருணத்தில் அவசியம் என்று கருதினார். அந்த சிங்கங்கள் இன்னும் வலிமை மற்றும் பொறுமை என்றே அழைக்கப்படுகிறது. 

வேதாகமம் ஜீவனுள்ள, வலிமையான, கடினமான தருணங்களில் உற்சாகத்தை கொடுக்கும் சிங்கத்தைப் பற்றி நமக்கு அறிவிக்கிறது. அந்த சிங்கம் பல நாமங்களால் அறியப்பட்டுள்ளது. தன்னுடைய பரலோக தரிசனத்தில் அப்போஸ்தலர் யோவான், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மீட்பையும் கொண்டுள்ள யாராலும் திறக்ககூடாத ஒரு முத்திரை புஸ்தகத்தைப் பார்க்கிறார். அப்போது, “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று யோவானுக்கு சொல்லுகிறார் (வெளி. 5:5). 

அடுத்த வசனத்தில் யோவான் புதிதான ஒன்றை காண்கிறார்: “இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு... மத்தியிலே நிற்கக்கண்டேன்” (வச. 6). சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒரே நபர்: இயேசு. அவரே வெற்றிசிறக்கும் ராஜா. அவரே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). அவருடைய பெலத்தினாலும் சிலுவையினாலும் நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எனவே அவர் நித்தியமானவர் என்னும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நாம் வாழலாம்.

சிறந்த ஞானமும் ஆயிரம் கண்களும்

“ஆத்துமாவின் நிலையை அனைத்து கோணங்களிலும் அலசுவதற்கு, ஒரு மேய்ப்பனுக்கு தேவனுடைய ஞானமும் ஆயிரம் கண்களும் தேவை” என்று திருச்சபை தலைவரான ஜாண் கிறிஸாஸ்டம் எழுதுகிறார். ஆவிக்குரிய ரீதியில் மற்றவர்களை நன்கு பராமரித்தல் எப்படி என்பது குறித்த விவாதத்தில் கிறிஸாஸ்டம் இப்படியாக பேசுகிறார். ஒருவரைக் கட்டாயப்படுத்தி குணமாக்குவது என்பது சாத்தியமில்லை என்பதினால், அவர்களை கரிசணையோடும் இரக்கத்தோடும் அவர்களின் இருதயத்தை அணுகுவதை அவர் வலியுறுத்துகிறார். 

அதற்காக வலியே இல்லாமல் அதை மேற்கொள்ள முடியும் என்று அர்த்தமல்ல என்றும் கிறிஸாஸ்டம் எச்சரிக்கிறார். ஏனெனில் “ஆழ்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய ஒரு நபரிடம் நீங்கள் மென்மையாய் நடந்துகொண்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யத் தவறினால் அவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் விரக்தியிலிருக்கும் அவரது உடம்பில் நீங்கள் இரக்கமின்றி கீறல் ஏற்படுத்தி சிகிச்சை செய்தால்... அவர் எல்லாவற்றையும் மறந்து, உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பார்.”

கள்ள போதகர்களால் துன்மார்க்கத்திற்குள் தள்ளப்பட்டவர்களின் நடத்தையை விவரிக்கும் யூதாவும் அதே பிரச்சனையை சந்திக்கிறார் (1:12-13, 18-19). அந்த வகையான மரண அச்சுறுத்தல்களின்போதும், யூதா கோபப்படாமல் கையாளுவதற்கே அறிவுறுத்துகிறார்.

அதற்கு பதிலாக, விசுவாசிகள் அச்சுறுத்தல்களை சந்திக்க தேவனுடைய அன்பில் இன்னும் அதிகமாய் வேரூன்றவேண்டும் என்று போதிக்கிறார் (வச. 20-21). நாம் தேவனுடைய அன்பில் ஆழமாய் வேரூன்றும்போதே, சரியான நேரம், தாழ்மை மற்றும் இரக்கத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஞானத்தை தேவனிடத்திலிருந்து பெறக்கூடும் (வச. 22-23). இந்த பாதையே, மற்றவர்களுக்கு சுகத்தை அடையச்செய்து, தேவனுடைய அன்பின் மகத்துவத்தில் இளைப்பாறச் செய்கிறது. 

நாம் தேவனை நம்புகிறோம்

வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). 

நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தயவை தொடரச்செய்தல்

தயவா அல்லது பழிவாங்கலா? லிட்டில் லீக் பிராந்திய சாம்பியன்ஷிப் பேஸ்பால் விளையாட்டின்போது ஏசாயா தன்னுடைய தலையில் பலத்த காயம் அடைந்தான். அவர் தன் தலையை பிடித்துக்கொண்டு தரையில் விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, அவரது ஹெல்மெட் அவனை கடுமையான காயத்திலிருந்து பாதுகாத்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கியதும், ஏசாயா தனது தற்செயலான பிழையால் பந்து எறிபவர் பாதிக்கப்பட்டதை உணர்ந்தான். அந்த நேரத்தில், ஏசாயா மிகவும் அசாதாரணமான ஒன்றைச் செய்தான். அந்த வீடியோ மிகவும் பிரபலமானது. அவன் பந்து எறியும் நபரிடம் சென்று, அவரை ஆறுதல்படுத்தும் வகையில் கட்டிப்பிடித்து, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 

பழைய ஏற்பாட்டில், ஏசா தனது இரட்டை சகோதரன் யாக்கோபை பழிவாங்கும் நீண்டகால திட்டங்களை கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாக இருந்தாலும், இதேபோன்ற ஓர் செய்கையை செய்வதை நாம் காணமுடியும். ஊரை விட்டுசென்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு யாக்கோபு வீடு திரும்பியதும், அவன் தனக்கு அநீதி இழைத்த வழிகளுக்குப் பழிவாங்குவதற்குப் பதிலாக ஏசா தயவையும் மன்னிப்பையும் தெரிந்தெடுத்தான். ஏசா யாக்கோபைக் கண்டதும், “எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” (ஆதியாகமம் 33:4). ஏசா யாக்கோபின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவன் அவனுடன் நலமாக இருப்பதாக அவனுக்குத் தெரியப்படுத்தினான் (வச. 9-11).

நமக்கு எதிராக செய்த தவறுகளுக்காக யாராவது வருத்தம் காட்டினால், நமக்கு ஓர் தேர்வு உள்ளது: தயவு அல்லது பழிவாங்குதல். அவர்களை தயவுடன் அரவணைப்பது, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறது (ரோமர் 5:8) மற்றும் ஒப்புரவாகுதலின் பாதையாகவும் இருக்கிறது. 

 

கடந்த மற்றும் நிகழ்கால தேவன்

நாங்கள் எங்கள் குடும்பமாய் வளர்ந்த ஓரிகான் நகரத்தை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அங்கு சிறந்த நினைவுகளை உருவாக்கினோம். அந்த இடத்திற்கு திரும்பி மீண்டும் வந்தபோது, நான் மறந்துவிட்ட தருணங்களை அது எனக்கு நினைவூட்டியது. எங்கள் பெண்கள் கால்பந்து விளையாட்டுகள், எங்கள் பழைய வீடு, தேவாலயக் கூட்டங்கள் மற்றும் எங்கள் நண்பர்களின் மெக்சிகன் உணவகம் என்று பல நினைவுகள் எனக்கு ஏற்பட்டது. இப்போது நகரம் முழுவதுமாய் மாறிவிட்டது. ஆனால் அங்கு வருவது உகந்தது என்று என்னை நம்பவைக்க போதுமான நண்பர்கள் எனக்கு அங்கு இருந்தார்கள். 

இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது, உறவுகள், அடையாளங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பரிச்சயத்தை அவர்கள் தவறவிட நேரிட்டது. தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ததற்காக சிறையிருப்புக்கு சென்றதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள், அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று கூறியபோது (எரேமியா 28:2-4; 29:8-9), அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சீக்கிரம் அவர்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிவிடுவார்கள் என்ற பொய்யான தீர்க்கதரிசனத்தைக் கேட்பது அவர்களுக்கு இலகுவாய் இருந்தது. 

வியாபாரிகளையும் அவர்களின் பொய்யான வாக்குறுதிகளையும் தேவன் அனுமதிக்கவில்லை. “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்” (29:8) என்று தேவன் அவர்களை எச்சரிக்கிறார். அவர் தன்னுடைய ஜனத்தைக் குறித்து அழகான திட்டம் வைத்திருக்கிறார். அவைகள் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணும் மேன்மையான திட்டங்கள் (வச. 11). அவர்களின் நிலைமை சவாலானது, கடினமானது மற்றும் புதியது. ஆனால் தேவன் அவர்களுடன் இருந்தார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (வச. 13) என்று அவர்களிடம் சொல்லுகிறார். “நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்” (வச. 14) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நம்முடைய பழைய மேன்மையான நினைவுகளை நினைக்கும்போது அது நம்மை சோர்வடையச் செய்துவிடுகிறது. தேவன் இப்போது என்ன செய்கிறார் என்பதைத் தவறவிடாதீர்கள். அவர் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார்.

 

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம்.